Thursday, July 15

களவாணி விமர்சனம்


தினமலர் விமர்சனம்

சற்று பெரிய இடைவெளிக்குப் பின் மண் வாசனையுடன் ‌வெளிவந்திருக்கும் கலக்கலான கிராமத்து காதல் கதைதான் களவாணி படத்தின் மொத்த கதையும். அதுவும் பச்சை பசேலென தஞ்சை மாவட்டத்தின் நஞ்சை - புஞ்சை பகுதிகளிலேயே களவாணி படம் ழுழுதும் படமாகியிருப்பது வேறு, கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்கிறது.

கதைப்படி தஞ்சை ஜில்லாவில் உள்ள மன்னார்குடி, ஒரத்தநாடு பகுத‌ிகளின் அருகருகே உள்ள கிராமங்கள் அரசனூரும், ராணிமங்கலமும் பரம்பரை பரம்பரையாக பகை கொண்டாடி வருகின்றன. இந்த இரண்டு கிராமங்களுக்கு இடையே ஒரு அழகிய காதல் படும் பாடுதான் களவாணி படம். கிராமத்து டீக்கடை பெஞ்ச்சில் நண்பர்களுடன் அமர்ந்தபடி போற.. வர்ற பெண்களை கிண்டலும் கேலியுமாக சைட் அடிக்கும் இளவட்டம் அறிக்கி எனும் அறிவழகன். ராணிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர். அவருக்கு அரசனூரை சேர்ந்த மகேஷ் எனும் மகேஷ்வரி மீது காதல். அறிக்கியின் நிலபுலங்களை கடந்து தினமும் ராணிமங்கலத்தில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு சைக்கிளில் வரும் மகேஷ்வரியை மிரட்டி, உருட்டி, ரிக்கார்டு நோட் எல்லாம் எழுதிக் கொடுத்து ஒரு வழியாக தன் காதலை ஏற்றுக்கொள்ளச் செய்யும் அறிக்கிக்கு வேறு ஒரு வகையில் பிரச்னை. அது, மகேஷின் அண்ணன் இளங்‌கோவிற்கும், அறிக்கிக்கும் பரம்பரை ஊர் பகைக்கும் மேலான வெட்டு - குத்து பகை. அந்த பகை அறிக்கியின் அடாவடித்தனங்களால் மேலும் மேலும் ஒரு பக்கம் வளர... மற்றொரு பக்கம் இவர்களது காதலும் பூத்து காய்த்து கனியாக காத்திருக்கிறது. ஊர், உறவு, பகையை மீறி மகேஷின் காதல் ஜெயித்ததா அல்லது தோற்றதா? என்பதை வித்தியாசத்துடன் விறுவிறுப்பாகவும் சொல்கிறது களவாணி படத்தின் மீதிக்கதை!

சிறுமி முதல் விடலைப் பெண்கள் வரை சகலரையும் என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லு... அதை செய்கிறேன், இதை தருகிறேன் என வாக்குறுதி கொடுத்தபடி வால் தனம் பண்ணும் அறிக்கி எனும் அறிவழகனாக 'பசங்க' விமல், பக்காவாக பாத்திரத்துடன் பொருந்தி நடித்திருக்கிறார். தன் காதலி நட்டு வைத்த நாற்றுக்கு மட்டும் அதிக உரம் வைத்து பெரிதாக வளர வைப்பதில் தொடங்கி, சொசைட்டிக்கு உரமூட்டை ஏற்றி வரும் லாரியில் ஏறி ஒரு மூட்டையை களவாடுவது வரை விமலின் களவாணித்தனங்கள் படம் முழுக்க பரபரப்பையும், விறுவிறுப்பையும் கிளப்புகிறதென்றால் மிகையல்ல!

அறிக்கி விமல் மாதிரியே மகேஷ் எனும் மகேஷ்வரியாக வரும் புதுமுகம் ஓவியாவும் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தி தியேட்டர் இருக்கையில் நம்மை கட்டிப்போட்டு என்னென்னவோ செய்கிறார். விமல் - ஓவியாவின் காதல் தெரிந்து கட்டாய கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்யும் அண்ணன் இளங்கோவையும், குடும்பத்தையும் ஏமாற்ற பால்டாயில் குடிக்கும் காட்சி உள்ளிட்ட காட்சிகளில் களவாணியை மிஞ்சி விடுகிறார்.

வில்லன் இளங்கோவாக புதுமுகம் திருமுருகனின் கண்களே அவரை சிறந்த வில்லனாக அடையாளப்படுத்தி விடுகிறது. ருத்ராட்சம் மாலைகளை கழற்றி வைத்து விட்டு அவர் அடிதடிக்கு தயாராகும் காட்சிகளே போதும்... அவரது வில்லத்தனங்களை பறைசாற்ற!! பஞ்சாயத்தாக வரும் கஞ்சா கருப்புவை அறிக்கியும், அவரது நண்பர்களும் படுத்தும் பாடு செம கலாட்டா. சிரித்து சிரித்து விலா எலும்பு வலிக்கிறதென்றால் மிகையல்ல.சரண்யா, பொன்வண்ணன், இளவரசு, பரோட்டா சூரி, நான் கடவுள் தவசி, பருத்திவீரன் சுஜாதா, பசங்க சிந்தியா அலைஸ் செந்தில்குமாரி என பலரும் பாத்திரத்திற்கேற்ற பளீச் தேர்வு.

எஸ்.எஸ்.குமரனின் இசையில் ஏழு பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி... பிரமாதம். ஒளிப்பதிவு தஞ்சை கிராமங்களின் அழகை பஞ்சம் இல்லாமல் மிக அழகாக படம் பிடித்திருக்கிறது. புதியவர் ஏ.சற்குணத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என நான்குமே நச்சென்று இருக்கிறது.

களவாணி : கலைவாணி - கலெக்ஷன் ராணி.

No comments :

Post a Comment