Wednesday, November 24

மந்திர புன்னகை விமர்சனம்


நடிகர் : கரு.பழனியப்பன்

நடிகை : மீனாட்சி

இயக்குனர் :கரு.பழனியப்பன்

தினமலர் விமர்சனம்

பார்த்திபன் கனவு, சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், சதுரங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய கரு.பழனியப்பன் கதாநாயகர் அவதாரம் எடுத்திருக்கும் படம்தான் மந்திரப்புன்‌னகை. அவரே இயக்கவும் செய்திருக்கும் இப்படத்தில் தமிழ்சினிமா பேசத்தயங்குகிற விஷயங்களை உரத்துப் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மற்ற தமிழ்படங்களில் இருந்து சற்றே மாறுதலான படம் இது என்பது ஆறுதல்.

கதைப்படி, கைநிறைய சம்பளம், குடி, நடத்தி என ஊரே வியக்கும் உல்லாச வாழ்க்கை வாழும் கட்டிடகலை நிபுணர் ஹீரோ கரு.பழனியப்பன். எந்த ஒரு விஷயத்தையும் வித்தியசாமாக அணுகும் ஹீரோ பழனியப்பனை முதல் பார்வையிலேயே பிடித்துபோகிறது நடிக‌ை மீனாட்சிக்கு! அதேமாதிரி ஆண் நண்பர்களுக்கு பீர் பாட்டிலை பல்லாலேயே திறந்து பார்ட்டி தரும் ஹீரோயின் மீனாட்சியையும் முதல் பார்வையிலேயே பிடித்து போகிறது நாயகர் கரு.பழனியப்பனுக்கு! அப்புறம், அப்புறமென்ன யதேச்சையாக இப்படி பார்த்து கொள்ளும் இவர்கள், தொழில்நிமித்தமாகவும் சந்திக்க அதனால் ஏற்படும் நட்பு காதலாகிறது. அந்த காதல் பூத்து, காய்த்து, கனியாகும் தருவாயில், கரு.பழனியப்பனுக்கு மீனாட்சி மீது சந்தேகம். அந்த சந்தேகம் வலுத்து நாயகர் நாயகியை கொலை செய்யவும் துணிகிறார். நாயகர் காதலியை கொன்றாரா? நாயகி காதலில் வென்றாரா..? என்பதை வித்யாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லி இருக்கிறார்கள் மீதிக்கதையில்!

கதையி்ன் நாயகராக கரு.பழனியப்பன் சரியாகவே பொருந்துகிறார். சோடாபுட்டி கண்ணாடி, அடர்ந்ததாடி, அடிக்கடி, மது, மாது என தமிழ்சினிமா கதாநாயகர்களின் இலக்கணங்களை மாறியிருந்தாலும் தலைக்கணம் இல்லாமல் நடித்து சபாஷ் வாங்கிவிடுகிறார். இந்த டைரக்டர் கம் ஹீரோ! பேஷ், பேஷ்!

சொகுசுகார் சேல்ஸ் கேர்ளாக மீனாட்சி நடிப்பில் நன்கு தேறி இருக்கிறார். ஆனால் உடம்பை ஸ்லிம் ஆக்குகிறேன் பேர்வழி என ஏதோ இரத்த சோகை நோயாளி மாதிரி சில சீன்களில் பரிதாபமாக காட்சி அளிக்கறார் பாவம்.

ஹீரோவின் நண்பர்களாக சந்தானமும், தம்பி ராமையாவும் அடிக்கும் இரட்டை அர்த்த கூத்துகள் சிரிப்புக்கு பஞ்சம் வைக்கவில்லை. ஹீரோவின் அப்பா நகுலன் பொன்னுசாமி, விலைமாது மகேஸ்வரி, ரிஷி, ரம்யா, மனோஜ் கிருஷ்ணா, மாஸ்டர் தருண் என அனைவரும் பாத்திரத்திற்கேற்ற பளிச் தேர்வு!

காண்டம்(ஆணுறை) வாங்க தயங்குவதில் தொடங்கி கள்ள தொடர்புகளால் ஏற்படும் பாதிப்புகள் வரை சகலத்தையும் புட்டு புட்டு வைத்திருக்கும் இயக்குநர் கரு.பழனியப்பன், அம்மா சென்டிமென்ட்டுகளுக்கு தரும் விளக்கம் மட்டும் சற்றே ஓவர் எனத் தோன்றுகிறது. இதுமாதிரி சில இடங்களில் இயக்குநர் அடக்கி வாசித்திருந்தால் மந்திர புன்னகையை காண தாய்குலங்களின் வரவும் இன்னும் சற்றே கூடுதலாக இருந்திருக்கும் எனத் தோன்றுகிறது. இயக்குநருக்கு ரொம்பதான் துணிச்சல்!

வித்யாசாகரின் இசையில் அறிவுமதி, யுகபாரதி இருவரது பாடல் வரிகளும், ராமநாத் ஷெட்டியின் ஒளிப்பதிவும், ராஜா முகமதுவின் படத்தொகுப்பும் படத்திற்கு பெரும்பலம். சந்தேகப்பேர்வழிகளும், மனநோயாளிகளும், உருவாகும் விதத்தை அலசி ஆராய்ந்துள்ள மந்திரப்புன்னகை, மந்தகாசப்புன்னகை.

No comments :

Post a Comment