Saturday, November 7

ஜகன்மோகினி விமர்சனம்




தினமலர் விமர்சனம்


நமீதாவின் பிரமாண்ட கவர்ச்சியை விரும்பும் ரசிகர்களையும், மந்திர - தந்திர மாயாஜாலங்களை மலைப்புடன் பார்த்து ரசிக்கும் குழந்தைகளையும், குடும்பங்களையும் நம்பி எடுக்கப்பட்டிருக்கும் மோகினி கதையை உள்ளடக்கிய படம்தான் ஜகன்மோகினி. ஏற்‌கனவே ஜெயமாலினி நடிப்பில்வந்த படம், வந்த கதை, அதே தலைப்பு... என்றாலும் நவீன கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உத்திகளை பயன்படுத்தி படம் பார்ப்பவர்களை மிரட்டுகிறார்கள். அந்த மிரட்டல் சில இடங்களில் கலக்கலாகவும், பல இடங்களில் கலகலத்தும் போயிருப்பதுதான் இந்த படத்தின் பலமும் பலவீனமும்!

ராஜாக்காள் காலத்து கதை! கதைப்படி பச்சைத்தீவு, மச்சத்தீவு, சங்குத்தீவு உள்ளிட்ட பல்வேறு குட்டி குட்டி தீவுகளை ராஜாக்கள் ஆள, சங்குத்தீவு இளவரசனுக்கு தந்தையை தீர்த்து கட்டிவிட்டு குறுக்கு வழியில் மொத்த தீவுகளுக்கும் சக்கரவர்த்தியாகும் ஆசை. இந்நிலையில் பச்சைத்தீவு இளவசன் ஜகதல பிரதாமன் மக்களுக்கு இடையூறு செய்யும் கடற் கொள்ளையன் அலைக்கள்ளனையும், அவனது கூட்டத்தையும் பிடிக்க மாறுவேடத்தில் சங்குத்தீவுக்கு அலைக்கள்ளனை துரத்தி வருகிறார். அவரிடம் இருந்து தப்பிக்கும் அலைக்கள்ளன், பிரதாபனின் படகை தீ அம்புகளால் தீக்கிரையாக்க, கடலில் குதித்து தப்பி பிழைக்க எண்ணும் கஜகதல பிரதாபன், மயக்க நிலையில் கரை ஒதுங்க, அவரை தமிழ் சினிமா வழக்கப்படி வாயோடு வாய் வைத்து தண்ணீரை உறிஞ்சி காபந்து செய்யும் மீவனப்பெண் மோகினி, பச்சைத்தீவு இளவரசர் எனத் தெரியாமல் அவர் மீது காதல் கொள்கிறார். ஜகதலபிரதாபனும் தான் இளவரசன் என காட்டிக் கொள்ளாமல் முத்த‌டக்கி மோகினி மீது காதல் கொள்கிறார். இதனூடே அலைக்கள்ளனை அவன் கூட்டத்தோடு கண்டுபிடித்து, கைது செய்யும் ஜகதலபிரதாபன் அதிர்ச்சியாகிறார். காரணம்... அந்த அலைகள்ளன் வேறு யாருமல்ல. மக்களை காக்க வேண்டிய சங்குத்தீவின் இளவரசன்தான். சக்கரவர்த்தி ஆசையில் மன்னனையும் வதைக்கும் அவனை கைது செய்து பச்சை தீவிற்கு அழைத்து வரும் பிரதாபன், சூட்டோடு சூடாக தன் காதலையும் மன்னரிடம் தெரிவித்து சம்மதம் வாங்குகிறார். அதே நேரம் பிரதாபனுக்கு முறைப்பெண் நிலைவை திருமணம் செய்ய திட்டமிட்டிருக்கும் பச்சைத்தீவின் அரசனோ, சங்குத்தீவின் அரசனுடன் சேர்ந்து நயவஞ்சகமாக மோகினியை தீர்த்துக் கட்டுகிறார். அத்திட்டத்திற்கு பதிலுதவியாக சிறையில் இருந்து வெளிவரும் இளவரசன் அலைக்கள்ளன், வெளிவந்ததும் ஜகதலபிரதாபனை தீர்த்துக்கட்ட திட்டம் போடுகிறார். அவனுக்கு கடவுள் சீமை தேவியின் நெற்றிப்பொட்டில் இருக்கும் நாகமாணிக்கத்தை அடைய துடிக்கும் போலி சித்தரும், மாந்திரீகருமான கோட்டா சீனிவாசராவ் உடந்தை‌யாக இருக்கிறார். அ‌லைக்கள்ளன் ரியாஸ்கானின் திட்டம் ஜெயித்ததா? பச்சைத்தீவு இளவரசன் ஜகதலபிதாபன் வென்றானா? இறந்து போன மோகினி நமீதா மீண்டும் எவ்வாறு வந்தார்? இளவரசன் ஜகதல பிரதாபனாக நடித்திருக்கு ராஜா - நிலாவின் நின்றுபோன திருமணம் மீண்டும் நடந்ததா? உள்ளிட்ட இன்னும் பல கேள்விகளுக்கு சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் பதில் அளிக்கிறது மீதி படம்!

முதல் காட்சியிலேயே பிரமாண்ட நமீதாவை மேலும் பிரமாண்டமாக (இரண்டு தென்னை மர உயரத்திற்கு) ஐஸ்கட்டி உருவில், கடலில் இருந்து கிளம்பி காற்றோடும், புயலோடும் அரண்மனை மாளிகையில் நடைபெற இருக்கும் ஜகதலபிரதாபன் (ராஜா) - நிலா திருமணத்தை தடுத்து நிறு்ததுவதில் தொடங்கி, சித்தரின் மந்திரத்திற்கு கட்டுப்படும் சின்ன சொம்பில் ஜலமாக அடைக்கலமாகி பின், ராட்சத மரமாக, சாலையில் கிடக்கும் பாறையாக பயமுறுத்துவது வரை மோகினி நமீதா நிஜமாகவே மோகினியாட்டம் ‌ஆடியிருக்கிறார்.

இளவரசன் ஜகதலபிரதாபனாக தெலுங்கு ராஜா, அவரது முறைப்பெண் நிலை, மந்திரவாதி கோட்டா சீனிவாசராவ், அரசர்கள் நரசிம்ம ராஜூ, பாலாசிங், அலைக்கள்ளன் ரியாஸ்கான், ராணி யுவராணி, நிலாவின் தந்தை மதன்பாப் உள்ளிட்ட எல்லாரும் பாத்திரத்திற்கேற்ற பளிச் தேர்வு என்றாலும், நாதசுர நங்கூரம் வடிவேலு, வெண்ணிற ஆடை மூர்த்தி அண்ட் கோவினரும், அவரது ஆவி அம்மா ஜோதி லட்சுமி கோஷ்டியினரும்தான் படத்தை தூக்கி நிறுத்தும் தூண்கள். வீட்டிற்குள் புகுந்த பாம்பை பிடிக்கும் மகுடியாக நாதஸ்வரத்தை வாசித்து சாரை சாரையாக நல்ல பாம்புகளை வீட்டிற்குள் படையெடுக்க வைக்கும் வடிவேலு செம காமெடி சரவெடி!

நமீதாவின் கவர்ச்சி மாதிரியே, இளையராஜாவின் இசையும் பலம்! என்.கே.விஸ்வநாதனின் இயக்கத்தில் வசனங்கள் புராண காலத்திலும் இல்லாமல், நிகழ்காலத்திலும் இல்லாமல் மாறி மாறி இருப்பது பலவீனம்! கருப்பு வெள்ளை புகைப்படத்தை கலரிங்கும், கம்ப்யூட்டர் மார்ப்பிங்கும் செய்து கொடுத்தது மாதிரி உயிர்ப்பு இல்லாமல் இருக்கிறது புதிய ஜகன்மோகினி.

ஜகன்மோகினி : ஜெயமாலினி நடித்தது ஜகன்மோகினி! ; நமீதாவுடையது ஜகா மோகினி!!

No comments :

Post a Comment