Monday, February 8

கதை விமர்சனம்


தினமலர் விமர்சனம்

பெரிய ‌பெரிய விருதுகளை எல்லாம் பெறும் ஒரு சைக்கோ எழுத்தாளரின் சொந்த கதையும், அவர் மனைவியை செய்யும் சித்ரவதையும்தான் கதை படத்தின் மொத்த கதையும்!

அனுபவங்களை மட்டுமே கதையாக எழுதி அவார்டுகள் பல பெறும் வித்தியாசமான எழுத்தாளர் ஷான்குமார். வலிய அனுபவங்களை ஏற்படுத்திக் கொண்டு எழுதும் வியாதியும் இவருக்கு உண்டு. இது தெரியாமல் ஷான் விரித்த காதல் வலையில் விழுகிறார் வயலின் இசைக் கலைஞர் நிவேதிதா. மோதல், காதல், கல்யாணம் எனப் போகும் இவர்களது வாழ்க்கையில் இன்னும் பல படுபாதக நிகழ்வுகளையும் வலிய ஏற்படுத்திக் கொண்டு அதை கதையாக எழுதி உயரிய புக்கர் விருதினை பெறும் ஷான் அதோடு நிறுத்தினாரா? என்றால் அதுதான் இல்லை...! அடுத்த நாவலுக்காக தன் மனைவியை அமெரிக்கா அழைத்து போய் அவரது பால்ய சிநேகிதருடன் பழக விட்டு, அவர்களுக்குள் கள்ளத்தொடர்பு ஏற்படுத்தி அதனால் தற்கொலை செய்யவும் தூண்டி அதையும் எழுதத் துடிக்கிறார். ஷானின் காதல் வலையில் விழுந்து அவரது மனைவியான புதுமுகம் நிவேதிதா, கணவர் விரித்த கள்ளத்தொடர்பு, தற்கொலை வலைகளில் விழுந்து மாண்டாரா, அல்லது மீண்‌டாரா என்பது திக் திக் என நெஞ்சை பதற வைக்கும் திடுக் சம்பவங்கள் நிறைந்த மீதிக்கதை!

சைக்கோ எழுத்தாளராக புதுமுகம் ஷான் குமார் அல்லட்டல் இல்லாத நடிப்பு. அல்ட்ரா மாடர்ன் சைக்கோத்தனம் என தூக்கி வாரிப்போட வைக்கிறார். ஷான், தன் கர்ப்பிணி மனைவியை புகைப்படம் எடுப்பதாக சொல்லி மாடிப்படிகளில் உருண்டு விழ வைக்கும் கொடூரத்திலும் சரி, ஆளுயர நாய்களை மனைவியை துரத்த விட்டு, மூச்சிறைக்க ஓட விட்டு, சாரி... நான்தான் உன் பீலிங் எப்படி இருக்குன்னு பார்த்தேன் என சாப்ட்டாக சொல்லும் இடத்திலும் சரி, புதுமுகமா இவர்? என கேட்க வைக்கிறார்.

ஷான் மாதிரியே புதுமுகம் நிவேதிதாவும் சபாஷ் வாங்கிவிடுகிறார். ஆரம்ப காட்சிகளில் வயலின் இசைக்கலைஞராக வாசிப்பதிலும் சரி, அடுத்தடுத்த காட்சிகளில் கணவனின் சேடிஸ்ட் சேட்டைகளை வெளியே சொல்ல வழி இல்லாமல் பொத்தி, பொத்தி வைத்து அழும் இடங்களிலும் சரி., நிவேதிதா நிறைவாக செய்திருக்கிறார். அதிலும் மத்தியில், மாடிப்படிகளில் உருண்டு கரு கலையும் காட்சிகளிலும் இறுதியில் தூக்குக்கயிறு வரை போய் மீளும் இடங்களிலும் மிரட்டலான நடிப்பில் எதிர்ப்பார்ப்பை எகிற வைக்கிறார் அம்மணி!

இவர்களது அமெரிக்க தோழனாக அபிநய், வில்லன் போல வந்து நல்லவனாக வாழ்ந்து ஷான்குமாரால் தண்ணீரில் அமுக்கி கொல்லப்படுவது கொடூரம்!

சிவாஜியாக வந்து செத்துப்போகும் கிரேஸிகுமார், சரோஜாதேவி ஸ்டைலில் நளினி, தோழி தீபா வெங்கட், பிற பிரபலங்களின் கதையை தான் எழுதியதாக உரிமை கொண்டாடி பணம் பறிக்கும் கஞ்சா கருப்பு அண்ட் கோவினர் உள்ளிட்ட அனைவரும் பாத்திரத்திற்கேற்ற தேர்வு!

பாலமுரளி கிருஷ்ணா. மதுரை சின்னப்பொண்ணு, மால்குடி சுபா ஆகியோரை ஒன்றாக ஒரு பாடலில் விட்டு இசையில் புதிய பரிமாணம் தொட்டிருக்கும் பால்.ஜே.வின் பின்னணி இசையும் பிரமாதம். அபுஷாவின் ஒளிப்பதிவு அமெரிக்காவிலும் சரி, இந்தியாவிலும் சரி... அற்புதம்! ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் மோகமுள் அபிஷேக்கின் இயக்கத்தில் ஏதோ ஒன்று முள்ளாய் நெருடுகிறது. அது கதை, திரைக்கதையில் இருக்கும் அழுத்தம் காட்சிப்படுத்தலில் இல்லாததே!

கதை : மற்ற தமிழ்சினிமாக்கள் மாதிரி சதையை நம்பவில்லை கதை! எனினும் நல்ல விதை இல்லை என்பதைல் சற்றே வதை!

No comments :

Post a Comment