Wednesday, June 2

குற்றப் பிரிவு விமர்சனம்


தினமலர் விமர்சனம்

போலீஸ் துறையில் நடக்கும் உள்குத்து சமாச்சாரங்களையும், அத்துறையில் நல்லவர் வேடத்தில் இருக்கும் கறுப்பு ஆடுகளையும், தோலுரித்துக் காட்ட முற்பட்டிருக்கும் படம்தான் குற்றப்பிரிவு.

நீதியும், நேர்மையும் நிரம்பிய காவல்துறை அதிகாரி ஸ்ரீகாந்த்துக்கும், தன்னை நேர்மையான அதிகாரிபோல் காட்டிக் கொண்டு பயங்கரவாதிகள் மற்றும் படுபயங்கரமானவர்களுக்கு உதவும் பிருத்விராஜூக்கும் இடையில் நடக்கும் யுத்தம்தான் குற்றப்பிரிவு. இந்த யுத்தத்தில் நீதியும், நேர்மையும் நிரம்பிய அதிகாரி ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றாரா? நேர்மை துளியும் இல்லாத பிருத்விராஜ் வெற்றி பெற்றாரா? என்பதுடன் ஸ்ரீகாந்த் மீது கமாலினி முகர்ஜி, சஞ்சனா இருவருக்கும் ஏற்படும் காதலை கலந்து கட்டி மீதிக்கதையை சொல்லி குற்றப்பிரிவு படத்தை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் படைத்திருக்கிறார்கள்.

ஸ்ரீகாந்த், ஆக்ஷக் ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கும் படம் எனும் சிறப்புடன், அவருக்கு போலீஸ் யூனிபார்மையும் கொடுத்து எதிர்படும் எல்லோரையும் கையில் துப்பாக்கியுடன் புரட்டி எடுக்கவும் வைத்திருக்கும் படம். ஸ்ரீயின் பாத்திரமும், அவருக்கு போலீஸ் சீருடையும் நன்றாகவே ‌பொருந்துகிறது. ரோஜாக்கூட்டம், பூ படங்களின் நாயகர் ஸ்ரீகாந்த் தானா இது? எனுக் கேட்டு ஆச்சர்யப்படும் அளவிற்கு அசத்தியிருக்கிறார் மனிதர். வாவ்!

வில்லானிக் ஹீரோவாக பிருத்விராஜ் காவல்துறையின் கருப்பு ஆடுகளுக்கு எடுத்துக்காட்டாக, எடுப்பாக நடித்திருக்கிறார். கமாலினிமுகர்ஜி, சஞ்சனா இரண்டு நாயகிகளில் கமாலினி கொஞ்ச நேரமே வந்தாலும் நெஞ்சை அள்ளுகிறார். சஞ்சனா வஞ்சனை இல்லாமல் உடம்பை காட்டி வந்து போகிறார். ரசிகர்கள் நொந்து போகாதிருந்தால் சரி!

பரணி கே. தரனின் ஒளிப்பதிவும், விஷ்வாவின் இசையும், செல்வாவின் சண்டைப் பயிற்சியும் படத்திற்கு பெரிய பலம். காவல்துறை பற்றி ஏதேதோ கருத்துக்கள் சொல்ல வந்து அதை முழுதாக வெளிப்படுத்த முடியாமல் இயக்குனர் மன்மோகன் சில இடங்களில் கோட்டை விட்டிருந்தாலும், பல இடங்களில் ஓட்டை விழாத திரைக்கதை மூலம் படத்தை தூக்கி நிறுத்த முற்பட்டிருக்கிறார்.

குற்றப்பிரிவு : தமிழ் திரைப்படங்களில் தோல்விப்பிரிவிலும் சேராது! வெற்றிப்பிரிவுக்கும் போகாத மத்திய பிரிவு!

No comments :

Post a Comment