Tuesday, September 14

நீயும் நானும் விமர்சனம்


தினமலர் விமர்சனம்

இரு பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் டான்ஸ் போட்டியை (பரிசு பத்து லட்சம் ரூபாய்) மையமாக இளைஞர்களை குறியாக வைத்து இயக்குனர் எஸ்.வி.சோலைராஜா எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் வித்தியாசமான படம் நீயும் நானும். காதல், காமெடி, தாய் சென்டிமெண்ட் இவற்றுடன் கலந்து சுவையான படமாக அளித்திருக்கிறார்.

படத்தில் மூன்று அறிமுக காட்சிகள். மூன்றுமே வித்தியாசமாக மனதில் பதியும்படி படமாக்கியிருக்கிறார்கள். இளைஞர் பட்டாளத்துடன் பெங்களூர் நகர வீதிகளில் மாடர்ன் டான்ஸ் ஆடி உற்சாகத்துடன் படத்தின் ஹீரோ சஞ்சீவ் நல்ல பாடல் காட்சியுடன் அறிமுகமாகிறார்.

எம்.பி.,யின் மகனுக்கு தன் கல்லூரியில் சீட் தர மறுக்கிறார் கல்லூரி அதிபர் சம்பத்குமார். பல டிவி சேனல்கள், மீடியா பார்வையில் கோபமடைந்த எம்.பி., சம்பத்குமாரை கன்னத்தில் அடிக்கிறார். ஒரு கோடி ரூபாய் ‌கொடுத்தாலும் இந்த பப்ளிசிட்டி கிடைக்காது. எல்லா சேனல்களிலும் இதை திரும்பி திரும்பி போடுவாங்க. கல்லூரி நிறுவனம் நேர்மையானது என நமக்கு பெயர் கிடைக்கும், என்று பார்க்கும் சம்பத்குமார், கல்லூரி சேர்மனாக வெள்ளை வேஷ்டி, சட்டையில் அறிமுகமாகியிருக்கிறார்.

சம்பத்குமார் பள்ளிக்கு புது டான்ஸ் மாஸ்டராக அறிமுகமாகும் ஹீரோ சஞ்சீவ் ‌வீட்டிற்கு பேப்பர், உணவு விடுதி, சலவைக்காரர் என்று பலர் வருகிறார்கள். அனுப்பியவர் கார்த்திக் என்கிறார்கள். கார்த்திக் பத்து வயது ஏழை சிறுவன். ஸ்மார்ட்டாக இருக்கும் பலருக்கும் உதவிகள் செய்யும் கார்த்திக், அட்டகாச அறிமுகம்.

கல்குவாரியில் கல் உடைக்கும் பெண்ணின் மகனான கார்த்திக்கின் மீது அக்கரை கொண்டு, தான் பணிபுரியும் பள்ளியில் சேர்க்கிறார் ஹீரோ சஞ்சீவ். கல்லூரி அதிபர் சம்பத்தின் மகன் சித்தார்த் (மாஸ்டர் சச்சின்) டான்ஸ் போட்டிக்கு தயாராகிறான். தன் தாயின் அவசர மருத்துவ சிகிச்சைக்கு ஐந்து லட்சம் ரூபாய் தேவைப்படும் கார்த்திக், டான்ஸ் போட்டியில் சேர விரும்புகிறான். முறைப்படி பயிற்சி இல்லாமல் இருந்தும், யதார்த்தமாக வாழ்க்கையில் நடக்கும் பல விஷயங்களின் ரிதம், அசைவுகளை வைத்து டான்ஸ் மூவ்மெண்ட்களாக ஆக்கி, டான்ஸ் மாஸ்டரை இம்ப்ரஸ் செய்கிறான் கார்த்திக். இதனால் சித்தார்த்துக்கு பதிலாக கார்த்திக்கை செலக்ட் செய்கிறார் சஞ்சீவ். தன் மகன் சித்தார்த்திற்கு பதிலாக கார்த்திக்கை செலக்ட் செய்தது கல்லூரி அதிபருக்கு பிடிக்கவில்லை. டான்ஸ் மாஸ்டர் பதவியில் இருந்து சஞ்சீவ் விலக நேரிடுகிறது. இருந்தாலும் கார்த்திக்கிற்கு உதவி செய்ய நொச்சிக்குப்பத்தி்ல உள்ள சாதாரண பள்ளியில் இருந்து 8 சிறுவர் சிறுமியரை சேர்த்து (நிறைய சிரமப்பட்டு) அவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார். பல தடங்கல்களுக்கு பிறகு இறுதிபோட்டியில் நொச்சிக்குப்பம் அணி, எஸ்.எம்.ஆர். பள்ளி அணியை வெற்றி கொள்கிறது. தன் பள்ளி அணி தோற்றாலும், கல்லூரி அதிபர் நொச்சிகுப்பம் பள்ளிக்கு ரூ.25 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்குகிறார்.

சஞ்சீவ் நடனக் காட்சிகளில் புயலாக ஆடுகிறார். கல்லூரி அதிபர் வீட்டில் வளரும் டான்ஸ் கலைஞர் தியாவை (நடிகை சேதனா) துடிப்போடு காதலிக்கிறார். ரொம்ப ரொம்ப ரொம்ப காதல் என்று இருவர் சொல்லுவதும், கொஞ்சுவதும் ரசிக்கும்படி இருக்கிறது. சஞ்சீவ் குப்பத்தில் பல வீடுகளுக்கு சென்று டான்ஸ் ஆட அழைத்து வருவதும், அவர்களுக்கு டான்ஸ் ஒத்திகை நடத்துவதும் கல கல.

ஒரே காட்சியில் வரும் பஸ் கண்டக்டராக வந்து முத்துக்காளை அசத்துகிறார். நெல்லை சிவா, சிங்கமுத்து ஆகியோரின் புதுமையான நகைச்சுவை காட்சிகள் படத்திற்கு ப்ளஸ். கல்குவாரியில் கல் உடைக்கும் தொழிலாளியான கார்த்திக்கின் அம்மா, கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் போல க்ரே கலரில் முழுக்கை ரவிக்கையும், புதிய சேலையும் எதற்காக அணிகிறார் என்பதும், டான்ஸ் மாஸ்டராக இருந்த சஞ்சீவ் பள்ளியை விட்டுச் சென்றதற்காக ஆப்ரிக்கர் ஒருவரை டான்ஸ் மாஸ்டராக அவசரமாக பணியில் சேர்ப்பதும் ஏன் என்பது புரியவில்லை.

சிறுவன் கார்த்திக் மீது மிகுந்த அக்கரை எடுத்து, அவனுக்கு நல்ல ஊக்கம், பயிற்சி அளிக்கும் உடலில் குறைபாடு உள்ள டான்ஸர் பாத்திரத்தில் வருபவர் நன்றாக டான்ஸ் ஆடி, நடத்து, நம்மை வியக்க வைக்கிறார். வாழ்க்கையில் உங்களுக்கு எது வருத்தம் அளிக்கிறது? என்பதற்கு, நமது தேசியகீதம் ஒலிக்கப்படும்போது என்னால் எழுந்து நின்று தேசியக்கொடிக்கு மரியாதை செய்ய முடியவில்லையே என்பதுதான் என்னுடைய ஒரே வருத்தம் என்று சொல்வது... நம் மனதை தொடுகிறது. கைத்தட்டல் பெறுகிறது.

கார்த்தி‌க்காக வரும் மாஸ்டர் ரின்சன் படம் முழுவதும் சிறப்பாக செய்கிறார். குட் டேலண்ட். சம்பத்குமாரின் ‌மனைவியாக நீண்ட நாள் கழித்து நடிகை அஞ்சு வருகிறார். டான்ஸ், இசை இரண்டிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து இசையமைத்திருக்கும் ஸ்ரீராம் விஜய், நடனம் அமைத்திருக்கும் ராஜ்கமல், கங்காதர் பற்றி ஸ்பெஷலாக குறிப்பிட வேண்டும். சின்மயி பாடியிருக்கும் அழகனே என் அழகனே பாடல், பிற‌ை சூடனின் தொடுவது கொடு, மடைதிறப்பது இசையே பாடல்களும், பாடல் காட்சிகளும் ஓ.கே.!

பிரேம் சங்கரின் ஒளிப்பதிவு பல இடங்களில் பாராட்டு பெறுகிறது. கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் பொறுப்பேற்றுள்ள எஸ்.வி.சோலைராஜாவின் நீயும் நானும் இளைய சமுதாயத்திற்கு நிச்சயம் பிடிக்கும்!

- எஸ்.ரஜத்

No comments :

Post a Comment